Monday, July 19, 2010

நியாயமான ஆருடங்கள் என்றைக்குமே மக்கள் மனதை பாதிக்காது

2008 ம் அரசியல் பெரும் புயல் கடந்து சென்றதை யாராலும் மறக்கமுடியாது. அதனை ஏற்ப்படுத்திய மக்களை எந்த ஒரு அரசியல் ஆருடங்களும் பாதிக்காமல் இருக்க மக்கள் தயாரான நிலையில் இருக்கிறார்கள் என்பதனை ஆருடங்களை பரப்பும் அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அறிக்கை மேல் அறிக்கை விடுவதனையும் ஒரு சில தலைவர்கள் தனது அரசியல் கொள்கையாகவே கொண்டுள்ளனர். இன்னும் ஒரு சிலர் வாய்ச்சொல் வீரராக முயல்வதனையும் மக்கள் நன்கு அறிவார்கள்.

அரசியல் மாற்றத்திற்கு ஏற்ப தலைவர்கள் தங்களை மாற்ற இயலவில்லை என்றால், மக்கள் கட்சியை புறக்கணிக்கும் நிலை வந்துவிடும் அபாயத்தை அனைவரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இதனை கட்சி மேல்மட்ட தலைவர்களும் அறிவார்கள்.

மக்கள் தேர்வுக்கு என்றைக்கும் தலைவணங்கும் தலைவர்களை நான் பார்த்ததுண்டு ஆனால் அந்த ஒரு காரணத்தை வைத்து கொண்டு அறிக்கை வழி எண்ணிக்கையை காட்டி கட்சியை பயமுறுத்தும் அரசியல் கோமாளிகளை என்ன என்று சொல்வது? என்றைக்கு, என் சேவை தான் சிறந்தது என்று சொல்லும் அளவிற்கு அரசியல் தலைவர்கள் மாறுகிறார்களோ, அத்தலைவன் எந்த ஒரு சூழ்நிலையிலும் அரசியலில் கரை சேர முடியாது என்பதனை பலர் புரிந்து கொள்ளவேண்டும்.

அரசியலில் மாற்றத்தை விரும்பும் நாம், அரசியலில் பிரதிநிதி மாற்றத்தை விரும்பாதது ஏன்? ஒரு நல்ல அரசியல் கொள்கைவாதி, அரசியலில் வெற்றியடைய செயல்பட வேண்டும். அதனை செய்யாமல், அரசியலையே வென்று விட வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தால், அந்த அரசியல்வாதி நிலை தடுமாறிவிட்டார் என்றுதானே சொல்ல வேண்டும்.

மக்கள் மனதை விட்டு விலகும் அரசியல் பிரதிநிதி என்றைக்கும் அரசியலில் நிலைக்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனை ஒரு சிலர் மறுப்பதும் உண்டு.

பத்திரிக்கை அறிக்கை மூலம் அரசியல் சேவை செய்த காலம் மாறி இன்று செயலில் அரசியல் விவேகத்தை காட்டும் தலைவனைத்தான் மக்கள் விரும்புகின்றனர்.

ஆருடங்களை தலைவர்களே பரப்புகிறார்கள் என்ற உண்மையை மக்கள் நன்கு அறிவார்கள் என்பதனை ஒரு சில தலைவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தலைவர்களும் உண்டு. அது கடந்த கால அரசியல் யுக்தி. இந்த கால அரசியலில் அது பலிக்காது. இன்றைய சூழ்நிலைக்கு அரசியல், சமூகவியல், பொருளாதாரம்,கல்வி, மற்றும் பல துறைகளில் திறமையாக மும்மொழிகளிலும் பேசவும், எழுதவும் திறமையுள்ள பிரதிநிதியைதான் மக்கள் விரும்புகின்றனர். ஆகவே மக்களுக்காக அரசியல் சேவை செய்யும் காலம் இது. இனி அரசியலுக்காக மக்களை முன்வைத்து முயல துடிக்கும் தலைவர்களை மக்கள் ஒதுக்க ஒரு பொழுதும் அட்சப்படுவதில்லை என்பதனை நாம் நன்கு அறிந்து கொள்ளவேண்டும்.

கொடுக்கப்பட்ட சேவை காலம் முடிவதற்குள், அடுத்த பொது தேர்தல் வாய்ப்பினை பற்றிய ஆருடங்களுக்கு பதில் சொல்லும் தலைவர்கள் சேவையை எப்படி சிறப்பாக மக்களுக்கு வழங்கமுடியும். ஆருடங்களுக்கு உட்பட்டவந்தான் அரசியல்வாதி. தனிமனித சுயலாபத்திற்கு ஆருடங்களை கண்டு பயம் கொள்வது ஏன்? ஆருடங்களை கண்டு பயம் கொள்ளும் தலைவர்கள் புரிந்தால் நன்று.

இனியும் இந்த அவல நிலை மக்கள் மனதை பாதிக்கும் என்ற எண்ணம் கொண்டுள்ள தலைவர்கள், இது போன்ற ஆருடங்களுக்கு ஆயிரம் கணக்கில் காரணங்களை சொல்லாமல், பலாயிரம் மக்களுக்கு சேவையை முன்வைத்தால் மக்கள் மனதை யாராலும் மாற்ற இயலாது என்பதனை மனதில் கொள்ள வேண்டும்.

ஆகவே, இந்த சூழ்நிலையில், நியாயமான ஆருடங்கள் என்றைக்குமே மக்கள் மனதை பாதிக்காது; அதே சமயத்தில் அது எந்த விதத்திலும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காது என்பதனை அரசியல் வட்டார தலைவர்கள் அறிதல் நன்று.